ஈரோடு, மார்ச் 24 –
ஈரோடு மேட்டுக்கடையில் திமுக இளைஞரணி ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களின் செயல்பாட்டால் 100% வெற்றி பெற முடிந்தது. சட்டமன்ற தேர்தலிலும் 100% வெற்றி பெற வேண்டும். தமிழகத்தை காக்கும் ராணுவ வீரர்களாக இளைஞர் அணி உள்ளது. கருப்பு சிவப்பு இளைஞர் படை இருக்கும் வரை தமிழ் நாட்டுக்குள் பாசிச சக்திகள் உள்ளே வர முடியாது.
தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத் துறை திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கலைஞர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரத்தை வங்கி கணக்கில் வரவு வைத்தார்.
தமிழ்நாட்டுக்குள் நுழைய பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் முயற்சி செய்கின்றனர். இவர்களின் விளையாட்டு வடநாட்டில் எடுபடும். தமிழ்நாட்டில் எடுபடாது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளது. இந்த கூட்டணியை மக்கள் நம்புகின்றனர். பா.ஜனதா ஏ. பி. சி டீம்களை இறக்கி விட்டனர். ஆனால் தமிழகத்தின் சாம்பியனாக தி.மு.க தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, சாமிநாதன், மதிவேந்தன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாசலம், பிரகாஷ் எம் பி, முன்னாள் எம் பி அந்தியூர் செல்வராஜ், எம் எல் ஏ க்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



