நாகர்கோவில், மே 7 –
குருந்தன்கோடு அருகே உள்ள கட்டிமாங்கோடு பகுதி சேர்ந்தவர் ஹர்சன் தாஸ் மனைவி டெல்பின் அமலா (24). இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். டிப்ளமோ தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக கிடைத்ததாக தெரிகிறது. இதனால் தனது தேர்வு தாளை மறுத்திருத்தம் செய்ய டெல்பின் அமலா முடிவு செய்தார். அதற்காக கடந்த தினம் தேர்வுக்கு பணம் கட்ட வேண்டி தனது கை குழந்தையுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது கழிப்பறைக்கு செல்வதற்காக டெல்பின் அமலா தனது குழந்தையை அங்கு மகளிர் பாதுகாவலரான கோட்டார் சாஸ்தான் குளக்கரை பகுதி சேர்ந்த மீரா (30) என்பவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் வந்து குழந்தையை பெற்றுக் கொண்டார். டெல்பின் அவரது வீட்டில் சென்று குழந்தையின் இடுப்பு பகுதியை பார்த்தபோது இடுப்பில் கிடந்த 8 கிராம் தங்க அரைஞாண் கொடியை காணவில்லை.
இதனால் அவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் தான் அதை திருடி இருப்பார் என சந்தேகம் அடைந்துள்ளார். இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து மீராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


