தென்தாமரைகுளம், ஏப். 29 –
ஆளூர், தோப்புவிளையை சேர்ந்தவர் ராஜகுமார் (59) கூலிவேலை செய்துவருகிறார். இவர் தற்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள புன்னார் குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் (20) என்ற மகனும் ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.
நந்தகுமார் தென்தாமரைகுளத்தில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் சம்பவத்தன்று வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் வடுகன்பற்று – சாமிதோப்பு சாலையில் வரும் போது கவர்குளம் தேரிவிளையில் வைத்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் நந்தகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிட்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் (28.04.2026) இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை ராஜகுமார் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


