தருமபுரி, ஏப்ரல் 24 –
தருமபுரி மாவட்டம் அரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கே. ஈச்சம்பாடி கிராமத்தில் 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி 1997ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்தது. கே. ஈச்சம்பாடி கிராமத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லை என்பதால் கே. ஈச்சம்பாடி காலனி பகுதியில் உயர்நிலைப் பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது நடுநிலைப் பள்ளியாக அது செயல்பட்டு வருகிறது.
கே. ஈச்சம்பாடி கிராம மக்கள் ஒரு கூரை, சிமெண்ட் அட்டைகளால் அமைக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள், சமையலறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் சொந்த செலவில் கட்டினத்தை கட்டி அந்தப் பகுதிக்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட அனுமதி கோரினார்கள். கே. ஈச்சம்பாடி காலனி பகுதியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கே. ஈச்சம்பாடி கிராமத்திலேயே தொடர்ந்து அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
அதன்படி காலையில் கே. ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள சில பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடியில் 900 – க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ள நிலையில் 43 வாக்குகள் மட்டுமே பதிவானது.
தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த உடன் இரவு இந்த வாக்குச்சாவடியில் இருந்து மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்ட வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


