ஈரோடு, ஜூலை 22 –
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள். கடன் வழங்கல் மற்றும் வசூல் நிலவரம், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆகியவற்றை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பொது சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்னணு சேவைகள், விண்ணப்பங்கள் பதிவு மற்றும் சேவை வழங்கும் நடைமுறைகள் குறித்து ஆய் மேற்கொண்டார். தொடர்ந்து, முதல்வர் மருத்தகத்தில் அத்தியாவசிய மருத்துகள் இருப்பு, பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படும் நடைமுறை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை சரக்கீட்டுக் கிடங்கில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, சேமிப்பு முறை விநியோக நடைமுறை மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, காஞ்சிக்கோவில் தினசரி சந்தையில் வியாபாரிகளுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சுகாதாரப் பராமரிப்பு. குடிநீர் வசதி மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, காஞ்சிக்கோவில் பேரூராட்சி, அவினாசிலிங்கபுரத்தில் சமுதாய கழிவறையை பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகள் கழிவறையை பயன்பாடு குறித்தும், அதன் தூய்மை, பராமரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து. காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட முத்துகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தை பார்வையிட்டு, குளத்தின் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள். நீர்வரத்து மற்றும் சுற்றுப்புறத் தூய்மை நிலவரம், குளத்தின் ஏலம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டப்பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிக்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வருகைப் பதிவேடு. ஏலப் பதிவேடு, புகார்ப் பதிவேடு, செயல் அலுவலரின் நாட்குறிப்பு. அசையா சொத்துகள் விவரப் பதிவேடு, குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்ட விவரப் பதிவேடு, திடக்கழிவு மேலாண்மைக்கான மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தொடர்பான பதிவேடு, தணிக்கைத் தடைகள் விவரப் பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அலுவலகத்தில் உள்ள பழைய பொருட்கள் ஏலம் விடவும். வரும் காலங்களில் பழைய பொருட்களை சேர்த்து வைக்காமல் இருக்க அறிவுரைகள் வழங்கினார்
இதனைத் தொடர்ந்து, குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது. உதவிக்குழுக்கள் மூலம் பணியாற்றும் பணியாளர்களின் ஒப்பந்த நடைமுறைகள் மற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் நிலை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளை விரைந்து நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு பூங்காவில் காய்கறி கழிவுகளை வெட்டப் பயன்படுத்தப்படும் இயந்திரம் பழமையான நிலையில் இருப்பதால் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கவும். சேகரித்து வைக்கப்பட்டுள்ள இயற்கை உர மூட்டைகளை விரைவாக விற்பனை செய்யவும். மக்காத பழைய பொருட்களை விதிமுறைகளின்படி அகற்றுதல் அல்லது விற்பனை செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ் கிருஷ்ணன், ஈரோடு சரக துணைப்பதிவாளர் குமாரி மோகனா, கூட்டுறவு சங்கத்தின் செயலாட்சியர் பதுரை அரசு, கூட்டுறவு சார்பதிவாளர் புனிதா, கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மூவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணசாமி, கவிதா, காஞ்சிகோவில் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



