மார்த்தாண்டம், ஜூலை 6 –
குலசேகரத்தை அடுத்த திருவரம்பு அருகே உள்ள செம்மண்தறை பகுதியை சேர்ந்தவர் வேதக்கண் (101). இரண்டாம் உலகப் போர் வீரர் 1925 ஜூலை 1 ல் பிறந்த இவர் ஜுலை 1 ல் தனது 101 வது பிறந்த நாளை மக்கள், பேரப்பிள்ளைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இவருக்கு 2 மகன்கள், 5 பேரப்பிள்ளைகள், 9 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். தற்போது தனது முதல் மகன் தேவதாஸ் குடும்பத்துடன் வாழ்த்து வரும் இவர் இப்போதும் யாருடைய உதவியும் இல்லாமல் தனது வேலைகளை தானே செய்து வருகிறார். தான் 2ம் உலகப்போர் காலத்து ராணுவ வீரர் என்று அலட்டி கொள்ளாமல் எளிமையாக பழகும் இவர் இப்போதும் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூறுகிறார்.
குழந்தை பருவத்தில் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் சிறு வயது முதல் விவசாய வேலைகளுக்கு சென்றுவிட்டார். ஆனால் அதில் கிடைக்கும் வருமானம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. அந்த நேரத்தில் தான் விளைவித்த வாழை குலைகளை மார்த்தாண்டத்தில் உள்ள சந்தையில் விற்க செல்லுவது வழக்கம்.
ஒரு முறை சந்தைக்கு வாழை குலை விற்க சென்ற போது அங்கு அறிமுகமான நபர் ஒருவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தால் நல்ல உணவு மற்றும் சம்பளம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். வேதக்கண் உடனடியாக சம்மதம் தெரிவித்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வு, நாகர்கோவில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற பின் 6 மாதம் பயிற்சிக்கு பின் தனது 19 வது வயதில் 1944 ல் பிரிட்டீஷ் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவருடன் அப்போது 32 பேர் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.
வேதக்கண் பிரிட்டிஷ் ராணுவத்தில் பயோனியர் படை பிரிவில் பணியில் சேர்க்கப்பட்டார். அப்போது 2ம் உலகப்போர் நடைபெற்ற காலம் என்பதால் பிரிட்டிஷ் ராணுவத்துக்காக சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று போரிட்டுள்ளார். இப்போது உள்ள பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற பல்வேறு சண்டைகளில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காக போரிட்டுள்ளார். பல இடங்களில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
2ம் உலகப்போர் வெற்றிக்கு பின் பிரிட்டிஷ் ராணுவம் போரில் ஈடுபட்ட வேதக்கண் க்கு பதக்கம் வழங்கி சிறப்பித்துள்ளது. உலகப்போர் 1945 முடிந்தாலும் அங்காங்கே சில இடங்களில் சிறிய சண்டைகள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. இதிலும் வேதக்கண் கலந்து கொண்டுள்ளார்
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் இந்திய ராணுவமாக மாற்றப்பட்டது. அதற்கு பின் பாகிஸ்தானுடன் போர் துவங்கியது.
வேதக்கண் இப்போரில் கலந்து கொண்டு தொடர்ந்து பல நாட்கள் ஒரே இடத்தில் தங்கி போரில் ஈடுபட்டுள்ளார். இதில் வேதக்கண் பலமுறை நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். அசாம் மாநிலத்தின் எல்லையில் காட்டுப்பகுதியில் போருக்கு சென்ற அனுபவம் இன்றும் பயத்தை ஏற்படுத்துகிறது என்று வேதக்கண் கடந்த கால நினைவுகளை கூறுகிறார். உலகப்போரில் எதிர்கொண்ட சவாலைவிட அதிகமாக இந்திய ராணுவத்தில் எதிர்கொள்ளும் நிலை உருவாக்கியதாகவும் வேதக்கண் கூறுகிறார்.
1953 ஆண்டு தேவைப்படுபவர்கள் தங்கள் சர்வீசை நிறைவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து ஓய்வு பெற்றுள்ளார். அதன் பின்னர் சொந்த ஊர் வந்து மீண்டும் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதற்குப் பின் ரஞ்சிதம் என்பவரை திருமணம் செய்துள்ளார். மனைவி ரஞ்சிதம் சில வருடங்களுக்கு முன் காலமானார். சர்வீசில் இருக்கும்போது இவருக்கு 18 ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. 101 வது பிறந்த நாளை கொண்டாடிய 2 ம் உலகப்போர் வீரரும் இந்திய ராணுவத்தின் தொடக்க கால வீரரான வேதக்கண்ணுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



