ஈரோடு, ஜூலை 21 –
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு தூண் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பூங்கா நுழைவாயிலில் இரவு நேரங்களில் பாதுகாப்பு கேட் இல்லாததால், அப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
வ.உ.சி. பூங்கா அருகிலேயே ஈரோடு முக்கிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வழியாகச் சென்று வருகின்றனர். இதனால் சேதமடைந்துள்ள நுழைவாயில் தூண் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே, விபத்து ஏற்படும் முன்பே சேதமடைந்துள்ள நுழைவாயில் தூணை உடனடியாக அகற்றி, புதிய தூண் அமைத்து சீரமைப்பதுடன், இரவு நேர பாதுகாப்பை உறுதி செய்ய நுழைவாயிலில் பாதுகாப்பு கேட் அமைக்க ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



