தஞ்சாவூர், ஜூலை 18 –
உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது.
தஞ்சாவூரை அடுத்த திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் அனைவருக்கும் ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கழகம்)மெட்ராஸ் திட்டத்தின் கீழ்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அரசு மற்றும் கிராமப்புற மாணவர்களும் உலக புகழ்பெற்ற ஐஐடி மெட்ராஸ் கல்வியை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசு அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் ஐஐடி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவரும் சமூக கல்வியாளரும் ஹரிகிருஷ்ணன் முன்னிலையில் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் வழங்கும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் ரேவதி பேசும் போது: திட்டத்தின் மூலம் ஜெ இ இ நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதி தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பி எஸ் டிகிரி படிப்புகளில் சேரும் வாய்ப்பு உள்ளது. உலக தரம் வாய்ந்த பட்ட படிப்புகளை இணைய வழியில் பயின்று நேரடியாக தேர்வுகள் மூலம் ஐஐடி மெட்ராஸ் பட்டம் பெற முடியும். 11ம் முடித்து 12 ஆம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் கோடை விடுமுறையில் நடைபெறும் 4வது வார பயிற்சி பங்கேற்று தகுதி தேர்வு வெற்றி பெற்று சேர்க்கை பெறலாம். 12ம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் தங்களது கல்லூரி படிப்புடன் இணைத்து ஐஐடி மெட்ராஸ் பி எஸ் டிகிரி தொடரும் வசதி உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்ட மாணவர்கள் உலக தரம் வாய்ந்த உயர் கல்வி வாய்ப்புகளை எளிதில் அடைந்து, தங்களது கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.



