சுசீந்திரம், அக். 23 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஆதி திராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தேரூர் அருகே உள்ள குலசேகரன் புதூர் பகுதியைச் சார்ந்த அமுதா ராணி என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் ஆதிதிராவிடர் அல்ல என தேருர் 8வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கு விசாரணை முடிந்து அவர் ஆதி திராவிடர் அல்ல. எனவே அவரது பதவி செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமுதா ராணி சுப்ரீம் கோர்ட்டில் அந்த தீர்ப்புக்கு தடை ஆணை வாங்கி இருந்தார். அந்த ஆணை வைத்து தனக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் உத்தரவு வழங்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை தனது அதிமுக பிரமுகர்களுடன் தேரூர் பேரூராட்சிக்கு வந்திருந்தார். ஆனால் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் அங்கு வரவில்லை. எனவே சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்பு அதிமுக நிர்வாகிகளுடன் தேரூர் பேரூராட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்தார். பிரச்சனைகள் ஏதும் வந்துவிடக் கூடாது என காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


