சுசீந்திரம், மார். 26 –
தேரூர் பேரூராட்சி சார்பில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி தேரூர் பேரூராட்சியில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தேரூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி “விற்பனைக்கல்ல எனது வாக்கு, உங்கள் வாக்கு உங்கள் உரிமை, வாக்களிப்போம் நாட்டை காப்போம்” ஆகிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் தேரூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



