புதுக்கடை, ஜன. 7 –
புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானமணி மனைவி பிரேமா (59). இவரது மகன் அபிலாஷ் (33). இவர் புதுக்கடை பேரூராட்சியில் சந்தை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது பாகோடு பகுதியில் மனைவி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரேமா கணவர் பெயரில் வீட்டுடன் சேர்ந்த ஏழரை சென்ட் நிலம் உள்ளது. அபிலாஷ் அந்த நில பத்திரத்தை தந்தையின் பெயரில் இருந்து தனது பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் கடன் வாங்கி உள்ளார். இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேமா குழித்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
குழித்துறை கோர்ட் உத்தரவின் படி புதுக்கடை போலீசார் சொத்து மோசடி செய்த அபிலாஷ், மனைவி இந்துஜா (28), பைனான்ஸ் கிளை மேலாளர் தங்க ரூபன், மல்லிகா மற்றும் செல்வராஜ் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


