கன்னியாகுமரி, ஜன. 6 –
சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று கடந்த 18 வருடங்களாக வெளிநாட்டினர் பங்கு பெறும் ஆட்டோ ரிக் ஷா சேலஞ்ச் என்ற சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 28-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து உள்பட பல நாடுகளை சேர்ந்த 29 பேர் கலந்து கொண்டனர். ஆட்டோக்களில் புறப்பட்ட இவர்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜ பாளையம், தூத்துக்குடி வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தனர். பயணத்தின் போது அவர்களே ஆட்டோவை ஒட்டி மகிழ்ந்தனர்.
1200 கிலோமீட்டர் தூரத்தை 9 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்த அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி சங்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகம் இட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெளி நாட்டினர் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர்.
மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தனர். இரவு நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவர்கள் நேற்று காலை கன்னியாகுமரியில் இருந்து 9 ஆட்டோக்களில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர்.



