நாகர்கோவில் ஜூலை 28
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் திங்கள்நகர் பணிமனை முன்பு, அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், நாகர்கோவில் மண்டல வணிக மேலாளரின் (DMC) அராஜகப்போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
திங்கள்நகர் பணிமனை முன்பு, அரசு போக்குவரத்து பிரிவு நாகர்கோவில் மண்டல செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேசியதாவது :-
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக போக்குவரத்துத்துறையில் 8,500 ஓட்டுநர் பணியிடங்களும், 6,800 நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளது. தமிழ்நாடு டி.என்.பி.எஸ்.சி மூலமாக இவர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசினார்கள். இது தொடர்பாக அவர் பேசியது நடந்ததா? நடக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது உள்ள சூழ்நிலைப்படி விவேகானந்தபுரம் டிப்போவில் இயக்கப்படும் 36 பேரூந்துகளில் 22 பேரூந்துகள் தடம் மாற்றி விடப்பட்டுள்ளது. ஒரு சிலர் பயன் பெறுவதற்காக இவை அரங்கேறி உள்ளது. இதனால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த இப்பேருந்துகளை நம்பி பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சிறந்த முறையில் இயங்கி மக்களிடம் நன்மதிப்பை பெற்று இலாபத்தில் செயல்பட்டு வந்தது. மேலும் இராணித்தோட்டம் பணிமனையில் பேருந்துகளுக்குரிய பாடி கட்டும் பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று வந்தது. பல முறைகள் மாவட்டத்தின் திருவட்டார், குழித்துறை, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற டிப்போக்களின் அருகே ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதும் அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் நிர்வாகத்தால் நசுக்கப்படுகிறார்கள். அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும். அதிகாரிகள் கல்வித்தகுதிக்கேற்ப உயர் பதவியில் இருக்கலாம். தொழிலாளர்கள் அவர்களின் தகுதிக்கேற்ப பணிகளில் இருக்கலாம். இதில் நான் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் தவறுதலாக கூட அதிகாரிகளிடம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தான் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண முடியும். நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிடும் மனப்பான்மையோடு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு உதவிட வேண்டும். அப்படி இருந்தால் பிற தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு கொடுக்கும். தொழிலாளர்கள் கேட்காமலயே நியாயமான கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றிட வேண்டும். டீசல் போடுவதில் தகராறு, எற்கனவே செல்லும் பேருந்து வழித்தடங்களை தடை செய்வது போன்றவை தொழிலாளர்களுக்கு விரோதமாக இருந்து வருகிறது. அப்படி இருந்தால் தொழிலாளர்கள் பிரச்சினை இருக்காது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும் என நம்புகிறேன் என அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில்
திங்கள்நகர் பணிமனை செயலாளர் ராஜன் வரவேற்று பேசினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, மண்டல தலைவர் சந்தனராஜ், மண்டல பொருளாளர் ரமேஷ், மண்டல விபத்து பிரிவு செயலாளர் முருகன், பணிமனை சட்ட ஆலோசகர் சந்திரசேகர், மண்டல இணைச் செயலாளர் மரிய செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவ செல்வராஜன், மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்மனோகரன், மாவட்ட கழக பொருளாளர் ஆர்.ஜே.கே.திலக், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அசோக்குமார், ராதாகிருஷ்ணன், ராஜகுமார், குளச்சல் நகர செயலாளர் ஆண்டரோஸ், மாவட்ட அமைப்புசாரா ஒட்டுநர் அணி செயலாளர் ஆறுமுகராஜா, திங்கள்நகர் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரன், திங்கள்நகர் பணிமனை பொருளாளர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக சிறபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் லதாசந்திரன், கழக மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன் சுந்தர்நாத், இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சேகர், நாகர்கோவில் தெற்கு பகுதி கழகச் செயலாளர் முருகேஷ்வரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள போக்குவரத்து கழகத்தின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



