தருமபுரி, அக்டோபர் 23 –
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி மாவட்ட சமூக சேவை அமைப்புகள் இணைந்து நடத்தும் டெங்கு விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சதீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டு பின்னர் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணியை கொடியாசித்து தொடங்கி வைத்தனர்.
இந்தப் பேரணியில் சுவாமி விவேகானந்தா நர்சிங் கல்லூரி, ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹெல்த் கேர் ட்ரைனிங் இன்ஸ்டியூட் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பேரணியில் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு நகர பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்றனர்.
வீடுகளில் உள்ள தேவையற்ற பழைய டயர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான பொருள்களை மூடி போட்டு பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். சிக்கன்குனியா, டெங்கு இல்லாமல் வாழ்வோம் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன்
மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



