திருவாரூர், நவம்பர் 12 –
திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு மற்றும் வேளாண் துறையின் நல்ல வழிகாட்டுதலாலும் குறுவை சாகுபடி முடிவுற்று தற்போது சம்பா / தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர்காப்பீடு தேதியை நீட்டிக்க கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களாகவும் உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிவுற்று தற்பொழுது சம்பா / தாளடி பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி செய்யும் பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இன்சூரன்ஸ் செய்திருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். அப்படி இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமானால், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா அடங்கல் பெற்றுதான் நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் (எஸ் ஐ ஆர்) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து சிட்டா அடங்கல் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. பயிர்க்காப்பீடு செய்யும் தேதி இம்மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிச்சுமை, ஆன்லைன் சர்வர் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர்க்காப்பீடு செய்யும் தேதியை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட வேண்டுமென திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.



