மார்த்தாண்டம், பிப். 3 –
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி மார்த்தாண்டத்தில் சிக்கியது ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவிலிருந்து மீன் கழிவுகள், ஆஸ்பத்திரி கழிவுகள் கூண்டு லாரிகள் மூலம் வெளியே தெரியாத விதத்தில் ரகசியமாக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுகிறது. இதனால் பல்வேறு விதத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது நோய்களும் பரவுகிறது. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து இந்த லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் நள்ளிரவில் இதற்கான பணி நடக்கிறது.
இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் சுபஸ்ரீ, சேர்மன் பொன் ஆசைத்தம்பி உத்தரவின் பேரில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சந்தேகத்தின் பேரில் வந்த கூண்டு லாரியை குழித்துறை நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்பொழுது கேரளாவில் இருந்து மீன் கழிவுகள் கொண்டு வருவது தெரிய வந்தது. பின்பக்க கதவைத் திறந்ததும் துர்நாற்றமும் விசியது லாரி பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் இதற்கான அபராத தொகை ரூபாய் ஒரு லட்சம் செலுத்தியதை தொடர்ந்து மீன் கழிவுடன் லாரி மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டது.



