நாகர்கோவில், நவம்பர் 12 –
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் வடக்கு தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு லாட்டரி விற்பனை நடந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து அங்கிருந்த லேப்டாப் மற்றும் செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ.4560 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் கோட்டார் வடிவீஸ்வரம் கல்மட தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி (53), பூமா (46), சண்முகா நகரை சேர்ந்த மீனாட்சி (30), தோப்பு வணிகர் தெற்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (55), கண்ணன் (54) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் கோட்டார் தோப்பு வணிகர் தெருவை சேர்ந்த பகவதி என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாட்டரி சீட்டுகள் மாவட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்வது, விசாரணையில் தெரியவந்தது.


