திருவாரூர், நவம்பர் 29 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது. திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் அரசு இ-சேவை மையம் ஆகிய அலுவலகங்களுக்கு தினம்தோறும் 1000-ற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் முக்கிய துறைகளின் அதிகாரிகளே இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இங்கு வருவதற்கும், போவதற்கும் ஒரே ஒரு வழி மட்டும் தான் இருந்து வருகிறது. இந்த சாலையானது இதுநாள் வரை மண்சாலையாகவே உள்ளது.
தற்போது பெய்துவரும் கனமழையினால், மண் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் செல்லும்
வயதான பெரியவர்கள் வழுக்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியமான இந்த சாலையை உடனடியாக தார் சாலை அல்லது சிமெண்ட் சாலையாக
அமைத்து தர பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.



