புதுக்கடை, மார்ச் 26 –
புதுக்கடை அடுத்த பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (56). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு பாமா (41) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சுரேஷ் குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் மகன்கள் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சுரேஷ் குமாரை கடந்த 4 நாட்களாக காணவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து திடீரென இன்று துர்நாற்றம் வீசியது. வீடு உட்பக்கமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, சுரேஷ்குமார் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ்குமார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து சுரேஷ் குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


