ஈரோடு, அக். 8 –
ஈரோடு திண்டல் வேளாளர் கல்வியியல் கல்லூரி கலை அரங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் பி.சி. துரைசாமி வரவேற்றார். சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர் சாந்தி துரை சாமி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்
கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பாதை என்ற தலைப்பில் கர்மவீரர் கண்டெடுத்த அரசியல் தலைவர் என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் முன்னிலையில் வெளியிட்டார்.
இதன் முதல் பிரதியை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் பெற்றுக் கொண்டார்.
இதன் பிறகு அவர் கூறியதாவது: இன்றைய காலத்தில் வளரும் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாகவும் வரும் காலங்களில் இளைஞர்கள் மக்கள் நலனுக்காக பயன்பெறுபவர்களாக தன்னலம் கருதாமல் பொது நலன் கருதி செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் நிச்சயமாக வரும் சந்ததியினருக்கு ஒரு பொக்கிஷம். இளம் அரசியல்வாதிகளுக்கும் வருங்கால சந்ததிகளுக்கும் வழிகாட்டியாயும் திகழும் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, ஓய்வு பெற்ற
ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், ராமநாதபுரம் முன்னாள் எம்பி உடையப்பன், திண்டுக்கல் முன்னாள் எம்பி உதயகுமார், பாஜ மாநில செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை முன்னாள் எம்எல்ஏ ராஜெந்திரன், இதயம் ஆயில் நிறுவனத்தின் முத்து, தொழில்அதிபர் ஜெயராமன், ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன், திண்டுக்கல் சுகுமார், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமாகா துணை தலைவர் விடியல் சேகர், பொது செயலாளர் யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



