தென்காசி, நவம்பர் 8 –
தென் மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வரும் கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சேது அரிகரன், மாவட்ட செயலாளர்கள் குலாம், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கனிம வள கொள்ளைக்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநில பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: திமுகவின் பல்வேறு கொள்ளைகள் ஊழல்கள் வெளிவரும் வேளையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 600 கோடி அளவில் கனிமவள கொள்ளை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்த்தால் ஆயிரம் கோடிக்கு மேலாக கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேரளாவில் மணல் அள்ளுவதற்கு தடை என்று சட்டம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் அதற்கான சட்டம் இருந்தும் அதை மீறுபவர்களே சட்டத்தை இயற்றி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட குவாரி விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு 54 குவாரிகள் மூடப்பட்டது. பின்னர் மீண்டும் புதிய குவாரிகள் என்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இது மக்களுக்கான அரசா? பணம் சம்பாதித்தவர்களுக்கான அரசா? என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. தமிழக – கேரள எல்லையான புளியரையில் பா.ம.க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி தர மறுக்கிறார்கள். தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கின்ற கோரிக்கை கனிம வளம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். கனிம வள கொள்ளைக்கு முழுக் காரணம் சபாநாயகர் அப்பாவு மட்டுமே. அவரை விலக்கி வைத்துவிட்டு விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்.
கனிம வளம் கொண்டு செல்வதை தடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்க தவறினால் தமிழகத்தை கடந்து ஒரு கனிம வள லாரியும் செல்லாதவாறு மறியல் போராட்டம் நடைபெறும். பா.ம.க தலைவர் மருத்துவர். அன்புமணி ராமதாஸ் தலைமையில் அந்த மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நெல்லை அரிகரன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ரவி, தென்காசி நகர செயலாளர் சங்கரநாராயணன், ஒன்றிய தலைவர் தண்டபாணி, நகரத் தலைவர்கள் பழனி, சாஸ்தா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், பேரூர் தலைவர்கள், செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



