கருங்கல், ஏப். 11 –
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிம்லர் நேற்று முன்தினம் கருங்கல் பகுதியில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: திராவிட கட்சிகளின் ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இளைஞர்களை சிந்திக்கும் திறனற்ற கூட்டமாக மாற்றி விட்டார்கள்; இளைஞர்கள் சிந்திக்கும் திறனோடும், துணிச்சலோடு நெஞ்சை நிமிர்த்தி பொருளாதாரத்தில் வலிமையோடு இருந்திருந்தால் 1000க்கும் 2000க்கும் இவர்கள் வாக்குகளை வாங்க முடியுமா?
நாட்டில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க இளைஞர்கள் தயங்குகின்றனர்; சிந்திக்கும் திறனற்றவர்களாய் போதைக்கு அடிமையாக்கி விட்டனர்; படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கூட வழங்க முடியவில்லையென்றால் இந்த அரசு எதற்கு? அவர்களுக்கு ஏன் இளைஞர்கள் வாக்கு செலுத்த வேண்டும்?
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும். கேரளாவில் கள்ளுக்கு தடையில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை விதிப்பு? எந்த கலப்படமும் இல்லாத உடலுக்கு ஆரோக்கியமான உணவுப்பொருள் கள்; கள் உணவின் ஒரு பகுதி என்று இந்திய சட்டம் கூறுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கள் மீதான தடையை நீக்குவோம்; பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்று சொல்கிறார்கள். நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து 22 வருடங்களாக தண்ணீர் தராமல் கேரள அரசு அடைத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கு எதிராக என்ன போராட்டத்தை முன்னெடுத்தார்கள்? தண்ணீர் கிடைக்காததால் நெல் விவசாயம் நடைபெறவில்லை; விவசாயிகள் கதறுகின்றனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதும் நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வருவோம். மேலும் ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளாலும் நிறைந்துள்ள கால்வாயை மீட்டெடுப்போம் என அவர் பேசினார். இந்த வாகன பரப்புரையின் போது வேட்பாளர் ஹிம்லர் பேச்சை கேட்க ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.



