கன்னியாகுமரி, மே 25 –
குமரி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க “போதை இல்லா குமரி” என்ற இலக்குடன் காவல்துறை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுதன் (28) மற்றும் சமாதானபுரம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (24) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். இருவர்மீதும் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித தயக்கமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



