போகலூர், அக். 25 –
மாநில அளவில் அக்டோபர் 29ஆம் தேதி புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இரண்டாம் கட்ட போராட்டம் நடைபெற உள்ளது என்று ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்ட போராட்டம் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட போராட்டமாக அக்டோபர் 29ஆம் தேதி மாநில அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.
இந்தப் போராட்டத்தின் போது தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், 1.6.2009 மூலம் அரசாணை எண் 234 மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது காலம் வரை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவரை எழுத்தற்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக நவம்பர் 24ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.



