கோவை செப்:09
கோவை கொடிசியாவில் வருகிற 11-ந் தேதி தொடங்கி 13 ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிற இந்த கண்காட்சியை எஸ் & டி குரூப் நிர்வாக இயக்குனர் சண்முக சுந்தரம் தொடங்கி வைக்கிறார். இது குறித்து “ரா மேட் இந்தியா 2025” தலைவர் சரவண குமார்,
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
நாட்டின் மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்கள் குறித்த முதன்மையான கண்காட்சியாக “ரா மேட் இந்தியா 2025” என்ற தலைப்பில் 4-வது பதிப்பாக கோவையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ரா மேட் இந்தியா கண்காட்சியானது தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள், பொருட்களை கையாளும் உபகரணங்கள், கிடங்கு வசதி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழிற்சாலைகளின் அனைத்து தேவைகளையும் ஒரே கூரையின்கீழ் நிறைவு செய்யும் வகையில் நடைபெறும் முக்கியமான கண்காட்சியாகும். மேற்சொன்ன தொழிற்சாலைகளின் தேவைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதும் மற்ற தொழில் சார்ந்த தேவைகளை நிறைவு செய்வதும் இந்த கண்காட்சியின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
கொடிசியா ஏ ஹாலில் நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி முடிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் 70 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. அப்போது விழா உதவி தலைவர் ஸ்ரீதர், கொடீசியா இணை செயலாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.



