தஞ்சாவூர், நவம்பர் 8 –
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் வாக்குகள் திருடு போகாமல் திமுக வாக்கு சாவடி முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலருமான கே.என். நேரு கூறினார். தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் – 2, வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
தற்போது யாருமே வாக்காளர்கள் கிடையாது. அனைவரும் புதிதாக சேர வேண்டும். இப்பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் – 2 க்கு முக்கிய வேலை இருக்கிறது. சிறுபான்மையினர் வாக்குகளை ஒன்றுகூட விடுபடாமல் சேர்க்க வேண்டும். சிறுபான்மை வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு வரும். எனவே சிறுபான்மை வாக்கு கள் விஷயத்தில் ஏமாந்து விடக் கூடாது.
யார் வாக்காளர்களாக இருக்கின்றனர் என்பதை விட யார் வாக்காளர்களாக இருக்கக் கூடாது என்பது முக்கியமானது வாக்காளர்களாக சேர 12 ஆவணங்கள் இருந்தால் போதும் எனக் கூறிய தேர்தல் ஆணையம் 13 வது ஆவணத்தை கூறியுள்ளது. பிகாரில் 7.5 லட்சம் வாக்குகளை நீக்கி இருப்பதாகவும் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சேரலாம் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இங்கு யாருடைய வாக்குகளை வேண்டுமானாலும் சேர்க்க அனுமதிக்க கூடாது. நம்முடைய வாக்குகளை சேர்ப்பதற்கு பாடுபட வேண்டும்.
இந்த 2 மாதங்களும் நாம் கவனமுடன் செயல்பட்டால் தான் திமுக 7வது முறையில் ஆட்சி அமைக்கும். நாம் நேர்மையான முறையில் வெற்றி பெறுவோம். நம்முடைய வாக்குகளை திருடாமல் பார்த்துக் கொள்வதற்காகத்தான் இக்கூட்டம் நடத்தப்பட்டது. யாருடைய வாக்குகளையும் திருடுவதற்காக அல்ல என்ற அமைச்சர் நேரு.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில்: தமிழ்நாட்டில் பா.ஜ. வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் வாக்கு திருட்டு. அதை தடுக்க திமுக தலைவர் கூறியது போல நாம் நமது வாக்கை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மக்களவை உறுப்பினர் முரசொலி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன்,மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், எம்எல்ஏ பழனிவேலு, ஒரத்தநாடு தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், திருவையாறு தொகுதி பார்வையாளர் மனோகரன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா மகேஷ் கிருஷ்ணசாமி, து. செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



