குளச்சல், மார்ச் 28 –
குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் பி டெக் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்து விட்டார். தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் கிராமத்தில் உள்ள தனது தாத்தா பாட்டியுடன் மாணவி வசித்து வருகிறார்.
அவரது தாத்தா வீட்டு மாடியில் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் (43) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தாத்தா பாட்டியின் வயது மூப்பு காரணமாக அவர்களுக்கு ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் உதவிகள் செய்து அந்த குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்தார்.
இதற்கிடையே கடந்த 2024 ஆம் ஆண்டு சிறுமியின் 17 வது வயதில் அவர் குளிக்கும் போது ஜன்னல் வழியாக செல்போனில் படம் பிடித்து, படத்தை சமூக தளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் ஒரு நாள் வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்து மயக்க மருந்து ஜூசை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து சிறிது நாளில் ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார்.
தற்போது சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் மாணவி கல்லூரியில் படித்து வருவதால் சமூக வலைதளத்தில் பாலியல் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியை பார்த்து உள்ளார். அப்போது தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடுமையை நினைத்து வருந்திய மாணவி, துணிச்சல் அடைந்து உண்மையை வெளிச்சத்தை கொண்டு வர முடிவு செய்து குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பலாத்காரம் செய்த ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து, சென்னை சென்று அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


