புதுக்கடை, ஜன. 19 –
புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் புரூஸ் (52). இவர் முள்ளூர்துறை பகுதியில் சொந்தமாக சொத்து வாங்கி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் அந்த சொத்தில் காம்பவுண்டு சுவர் கட்ட பணியாளர்களுடன் சென்றிருந்தார். அப்போது முள்ளூர் துறை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் உள்ளிட்ட 34 பேர் கும்பலாக சென்று பயங்கரமான ஆயுதங்களுடன் சொத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
மேலும் கெட்ட வார்த்தைகள் பேசி, கையில் இருந்த ஆயுதங்களால் கொலை மிரட்டல் விடுத்து காம்பவுண்ட் சுவரை உடைத்தனர். இதனால் சொத்தின் உரிமையாளர் ராபர்ட் புரூசுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது. இது குறித்து குழித்துறை நடுவர் நீதிமன்றம் 2 ல் புகார் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் காம்பவுண்ட் சுவரை கட்டுவதை தடுத்து, இடித்து தள்ளிய 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


