சென்னை, அக். 25 –
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் நிலைமைக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை எழிலகம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதியிலிருந்து துவங்கியதாகவும் 1.10.2025 முதல் 24.10.2025 வரை தமிழ்நாடு முழுவதும் மழை சதவீதம் 21.8% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது உருவான புயல் சென்னை நோக்கி நகரும் என முன்னதாக தகவல் இருந்தாலும், அது திசை மாற்றி ஆந்திரா நோக்கி செல்கிறது. இதன் விளைவாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாத பருவமழை காலத்தை முழுமையாகச் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் சாமர்த்தியமாக செயல்படுவார் எனவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆய்வின் போது வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செய்லாளார் சாய்குமார், வருவாய் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சிஜி தமாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.



