கன்னியாகுமரி, மார்ச் 25 –
குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ. அன்பு உத்தரவின்படி, உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் ஸ்ரீ வல்சன் வழிகாட்டுதலின்படி, பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர் குமரி, பொய்கை காட்டில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அவருடன் ஆரல்வாய்மொழி பிரிவு வனவர் மணிகண்டன், வனக்காப்பாளர்கள் வனஜா, முத்துராமலிங்கம், முத்துக்குமார், தீபா மற்றும் வன காவலர்கள் சிவா, புஷ்பராஜ், பிரவீன் ஆகியோர் உடன் வேட்டை தடுப்பு காவலர்கள் விஜி, தனுஷ் ஆகியோர் அடங்கிய குழு இரவும் பகலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொய்கை காப்புக்காடு பகுதியில் அத்துமீறி நுழைந்து வேட்டைக்கு வந்த இரண்டு நபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) என தெரிய வந்தது. மேலும் அவர்கள் காட்டில் வேட்டையாட முயன்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, குற்றவாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்ச ௹பாய் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது. இதுபோல் காட்டிற்குள் அத்துமீறி வேட்டையில் ஈடுபடுபவர்கள் மீதும், வனத்தீ ஏற்படுத்துபவர்கள் மீதும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன அதிகாரிகள் எச்சரித்தனர்.



