குளச்சல், செப்.18-
மணவாளக்குறிச்சி, ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஜினி ஜான் (31). அந்தப் பகுதியில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மனைவி ஆட்லின் ஜமீலா (29) பி.எட் படித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது 101 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களில் கடனை அடைக்க வேண்டும் என்று கூறி ஜினி ஜான் தனது மனைவியிடம் நகைகளை வாங்கி அடகு வைத்துள்ளார். ஆனால் நகைகளை மீட்கப்படவில்லை.
இது குறித்து ஆட்லின் ஜமீலா கணவரிடம் கேட்ட போது அவர்களிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 23-2-2025 அன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஜெமிலாவை மாடியில் இருந்து ஜின் ஜான் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடி சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் ஆட்லின் ஜெமிலா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு இடையே ஜினி ஜான், அவரது தந்தை ஜான் ஜார்ஜ் (56), தாயார் ரெக்ஸிலின் ஜீவா (48) ஆகியோர் கூடுதலாக மேலும் ரூ. 3 லட்சம் வரதட்சணை கேட்டு ஆட்லின் ஜெமிலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகநலத்துறை அதிகாரியிடம் புகாரளித்தார். இந்த புகாரை பரிசீலித்த சமூக நலத்துறை அலுவலர் ஜினி ஜான், அவரது தந்தை, தாயார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு அறிக்கை கொடுத்தனர். இதை அடுத்து மகளிர் போலீசார் மூன்று பேர் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


