களியக்காவிளை, டிச. 20 –
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல ஆம்னி பேருந்தில் பயணித்த நர்சிங் மாணவி மற்றும் அவரது தாயாரை களியக்காவிளை அருகே நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், கழக்கூட்டம், குடவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு மகள் அனந்தலட்சுமி (18). சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக மாணவி அனந்தலட்சுமி மற்றும் அவரது தாயார் லிஜி (52) ஆகியோர் வியாழக்கிழமை மாலை சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தில் ஜிஎஸ்டி வரி உள்பட மொத்தம் ரூ. 4,083 கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.
பேருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வந்தபோது, இப்பேருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லாது இங்கேயே இறங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி இருவரையும் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர்.
திருவனந்தபுரத்துக்கு பயணச்சீட்டு வழங்கி விட்டு பாதி வழியில் இறக்கி விடுவது குறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் மாணவி மற்றும் அவரது தாயார் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு தகாத வார்த்தைகள் பேசி மிரட்டினராம். தொடர்ந்து தங்கள் வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாத நிலையில் தவித்தபடி நின்ற இருவரையும் கண்ட அப்பகுதியினர் அவர்களை களியக்காவிளை பகுதிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து மாணவி தனது தாயாருடன் களியக்காவிளை காவல் நிலையம் சென்று தனியாக பயணம் செய்த பெண் பயணியிடம் மரியாதை குறைவாக செயல்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது பேருந்து நிர்வாகம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


