சுசீந்திரம், ஜூலை 17 –
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்னும் தலைப்பில் கருத்துரை நடைபெற்றது. விழாவில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் டாக்டர்.கே.அழகேசன் வரவேற்புரை ஆற்றினார். மூத்த பேராசிரியரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமாகிய டாக்டர்.ஏ.சந்திரசேகர் தலைமையுரை ஆற்றினார்.
நிகழ்வில் சுசீந்திரம் காவல்துறை உதவி ஆய்வாளர் தனீஷ் லியோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதையின் கொடுமைகளை பற்றியும், சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியும் எடுத்துக் கூறினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியை எம்.ராதிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி டீன் பேராசிரியர் எஸ்.சுந்தர்ராஜ் மற்றும் பேராசிரிய பெருமக்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள்.



