தஞ்சாவூர், ஜூலை 24 –
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழக சட்டப்பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தஞ்சாவூரில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், பொது செயலாளர் சாமி நடராஜன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் முடிந்த பின்னர் மாசிலாமணி, சாமி நடராஜன், ஈசன் முருகசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் காலத்தில் 5 ஏக்களுக்கு குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 25 மற்றும் ஜூன் 16 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ரூபாய் 75 ஆயிரம் வரை மட்டுமே முழு தள்ளுபடி என மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. த.வெ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் கடன் தாமதமாகும் பட்சத்தில் கூடுதல் வட்டி சுமை விவசாயகளையே சாரும் சூழல் உள்ளது.
இந்த வட்டி சுமையை ஏற்க வேண்டும். சிறுகுறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும் இதர விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வாங்கக் கோரி 15 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து சென்னை சென்று முதல் அமைச்சரை நேரில் வலியுறுத்த உள்ளோம். சட்டபேரவை கூட்டத் தொடருக்குள் இதற்கான அறிவிப்பு வராவிட்டால் சென்னையில் சட்டப் பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு பேராட்டம் நடத்தப்படும்.
மேலும் குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் நிவாரணமும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். பற்றாக்குறை காலங்களில் ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை தமிழ்நாடு அரசு கேட்டுப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



