மார்த்தாண்டம், ஆக. 11 –
நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி (25). இவரை அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகதீஷ் (29) என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணமான அடுத்த நாளிலிருந்து கணவன் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அஸ்வினியை ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி அஸ்வினி கணவர் ஜெகதீஷ் உடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமியார் ஜெயந்தி (55) அஸ்வினியை பார்த்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதை அஸ்வினி தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஜெகதீஷ், மாமியார் ஜெயந்தி, கணவரின் தங்கை ஜெகதி (27) ஆகியோர் சேர்ந்து அஸ்வினியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அஸ்வினி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் ஜெகதீஷ், ஜெயந்தி, ஜெகதீ ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


