குளச்சல், ஏப். 6 –
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குளச்சல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சிவகுமார் மற்றும் அவருடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் தொடங்கி பொதுமக்களிடம் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் விதிமுறைப்படி வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் உட்பட 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு சேகரிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் சென்றதாக குளச்சல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் தேர்தல் விதிமீறல் குறித்து கூறினர்.
பின்னர் குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் சிவகுமார், நகர பாஜக தலைவர் சதீஷ் பாரதி, செயலாளர் பிரேம்ஜித் கவுதம், இந்து முன்னணி மாவட்ட உறுப்பினர் பிரதீப் மற்றும் வக்கீல் மகேஷ் உட்பட 55 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்தனர்.


