நாகர்கோவில், மே 20 –
நாகர்கோவில், கோட்டார் கீழராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (52) மீன்பிடி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கோபி. இரு குடும்பத்தாருக்கும் சுமார் 20 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. பிராங்கிளின் தனது குடும்ப தேவைக்காக தங்க நகைகளை மனைவி சீதாவிடம் கொடுத்து அடகு வைக்க கூறுவது வழக்கம். சீதாவுக்கு சரிவர விவரங்கள் தெரியாததால் அவருக்கு உதவியாக கோபி மனைவி சுசிலாவை வங்கிக்கு உடன் அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சீதா அடகுவைத்த பணம் ரூ.11 லட்சத்தை வேறு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருந்தது. இது குறித்து சீதாவுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 25.10.2025 அன்று உடல் நலக்குறைவு காரணமாக சீதா மரணம் அடைந்தார். அவர் இறந்த பிறகு தான் சீதாவின் நகை அடகு வைத்து பெறப்பட்ட ரூ. 11 லட்சம் வேறு வங்கி கணக்கு மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இது தொடர்பாக பிராங்கிளின் குடும்பத்தினர் விசாரித்த போது, சீதாவுடன் வங்கிக்கு சென்ற கோபி மனைவி சுசீலா, அதே பகுதியை சேர்ந்த பிந்துஷா, இந்து ஆகியோர் சேர்ந்துதான் பணத்தை பிந்துஷா வங்கி கணக்கில் மாற்றியது தெரிய வந்தது. இது குறித்து அறிந்ததும் பிராங்கிளின் குடும்பத்தினர் சென்று பணத்தை கேட்டபோது ஏற்கனவே பணத்தை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாததால், இதையடுத்து பிராங்களின் தனது மனைவியை ஏமாற்றி சுசிலா 11 லட்சம் நம்பிக்கை மோசடி செய்து திருடி விட்டதாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் தற்போது சுசீலா, பிந்துஷா, இந்து ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின் தான் இது தொடர்பான விவரங்கள் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.


