நாகர்கோவில், மே 30 –
நாகர்கோவில் செட்டிகுளம், கணபதி நகர் பகுதி சேர்ந்தவர் கலைச்செல்வி (59). இவர் குமரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ராமர் 2016ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு திசையன்விளை பகுதியை சேர்ந்த மாலதி என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறினார்.
எனது மகனுக்கும் கப்பலில் வாங்கி தருவதாகவும், இதற்காக ரூ. 45 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார். அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் இந்த கடனை எளிதாக அடைத்து விடலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நான் எனது மகனின் வேலைக்காக ரூ. 45 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிய அவர்கள் வேலை எதுவும் வாங்கிக் தரவில்லை. இது குறித்து காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று நான் கூறியதால் ரூ.4 லட்சத்தை மட்டும் திருப்பி தந்தனர். மீதி ரூ. 41 லட்சத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். பணத்தை கேட்டால் தற்போது மிரட்டி வருகிறார்கள் என புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட எஸ் பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது கலைச்செல்வியின் புகாரின் பேரில் அவரது ரூ.41 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்ததாக திசையன்விளை சேர்ந்த மாலதி, கரம்பாடு சகாய கணேஷ், மன்னார் புரத்தை சேர்ந்த சேவியர் லிபர்ட், திசையன்விளையைச் சேர்ந்த பலன், இசக்கிமுத்து ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


