வேலூர், டிச. 17 –
வேலூர் அருகே அரியூர் நாராயணி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11.20 மணியளவில் நாராயணி பீடத்திற்கு வந்த குடியரசுத் தலைவர், அங்குள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் மூலம் வரவேற்கப்பட்டார்.
பின்னர் சாலை வழியாக ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு ஸ்ரீ நாராயணி இடத்தில் உள்ள மகாலட்சுமி அம்மனை வழிபட்டார். அவருக்கு கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை தங்கக் கோவில் நிறுவனர் சக்தியம்மா விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து, தியான மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்வர்ண மஹா லட்சுமிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி குடியரசுத் தலைவர் தரிசனம் செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தரிசனத்திற்குப் பிறகு, சாலை வழியாக மீண்டும் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



