நாகர்கோவில், ஜூலை 24 –
நாகர்கோவில் கோட்டார் கீழ சரக்கல்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் காலை அந்த வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து சோதனை செய்தபோது அதில் சாக்கு பைகளில் சுமார் 150 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றை கைப்பற்றி கோட்டாறு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வீட்டின் உரிமையாளர் யார்? இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வடசேரி பகுதியில் கடை ஒன்றில் ரகசியமாக பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அந்த கடையில் சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வடசேரி போலீசார் இது தொடர்பாக கடை உரிமையாளர் கிருஷ்ணன் கோவில் காமராஜர் புரத்தை சேர்ந்த ரமேஷ் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.



