சுசீந்திரம்.நவ.20
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் (நவ. 17) முதல் ஒரு மாதம் மாணிக்க ஸ்ரீபலிவிழாவும், மண்டல பூஜையும் கொண்டாடப்படுகிறது. திங்கள் கிழமை தோறும் சோமவார விசேஷ வழிபாடுகளும் நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்க ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாணிக்க ஸ்ரீபலி விழா தொடங்கி அடுத்த மாதம் டிச. 15-ந் தேதி வரை ஒரு மாத காலம் நடக்கிறது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி கடந்த 17ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாணிக்க ஸ்ரீபலி நடைபெற்றது.
கார்த்திகை மாதம் முழுவதும் காலை 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பரிமள சந்தன சார்த்தும், விசேஷ தீபாராதனையும் மாலை 6.30 மணிக்கு கோவில் சுற்றுப் பிரகாரங்களில் உள்ள பாவை விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும், பஞ்சாட்சர ஜெபயோகமும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆலயத்தை சுற்றி சிவபெருமான் ரிஷப வாகனத்திலும், திருவேங்கட விண்ணவரம் பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் இசைக்க திருக்கோவிலை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பிரதோஷ தினங்களில் மட்டும் ஆறு முறை பிரகாரங்களில் வாகன பவனி நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், திருக்கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர். இதேபோல சுசீந்திரம் தெப்பக்குளத்தெரு அரசடி விநாயகர், சன்னதி தெரு குலசேகர விநாயகர் கோவில், வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில், ஆஸ்ரமம் அஞ்சன மெழுதிய கண்டன் சாஸ்தா கோயில், துவாரகை கிருஷ்ணன் கோயில் தேரூர் எடுத்த ஆயுதமுடைய சிவபெருமான் கோவில் உள்பட பிரசித்தி பெற்ற கோவில்களில் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மண்டல பூஜைகள் நடக்கிறது.



