சுசீந்திரம், செப். 23 –
அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி துவக்க விழா கற்காடு கிராமத்தில் நல்ல விவசாய நடைமுறைகள் என்ற தலைப்பில் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் வரவேற்புரை வழங்கி அட்மா திட்டங்கள் உழவர் செயலி குறித்து எடுத்துரைத்தார். உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குனர் ஜாய்லின் சோபியா அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை வழங்கினார். மேலும் பண்ணை பள்ளி நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். திருப்பதிசாரம் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஜெகன் அவர்கள் மண் பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்கும் முறையை விவரித்தார்.
ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் இருந்து, குறுக்கும் நெடுக்குமாக மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் இடத்தில் உள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை, மண்ணை நீக்காமல், கையால் அப்புறப்படுத்த வேண்டும்.’வி’ வடிவத்தில் குழி வெட்டி, அதன் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழாக மண்ணைச் செதுக்கி எடுத்துச் சேகரிக்க வேண்டும்.நெல் பயிர்கள் பயிரிடும் நிலத்தில் அரை அடி ஆழத்துக்கும், வாழை, காய்கறிகள் பயிரிடும் நிலத்தில் முக்கால் அடி ஆழத்துக்கும், தென்னை பயிர்களுக்கு 3 அடியிலும் மாதிரிகளும் எடுக்க வேண்டும்.
மர நிழல், வரப்பு வயலோரம், நீர் தேங்கிய பகுதி, எரு மற்றும் உரம் கொட்டி பகுதி, உரம் போட்ட உடனே மண் மாதிரிகளைச் சேகரிக்கக் கூடாது. இந்த மண்ணை நன்றாகக் கலந்து, கால் பங்கீட்டு முறையில், சம பங்காக நான்காக பிரிக்கவும். நான்கு தனித்தனி கூறுகளாகப் பிரித்து, எதிரெதிரே உள்ள இரு பங்குகளை கழித்து விடவும். மீதமுள்ள இரு பங்குகளை ஒன்றாக சேர்த்து கலக்கி, மீண்டும் நான்கு பங்காகப் பிரிக்கவும். இப்படி தொடர்ந்து அரை கிலோ வரும் வரை பங்கீடு செய்யவும்.
இந்த மண் மாதிரியை, திருப்பதிசாரம் மண் ஆராய்ச்சி நிலையத்தில் கொடுத்து மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உர மேலாண்மை செய்தால், நல்ல மகசூல் பெறலாம். இதில் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நோட்டு பேனா மற்றும் கோப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



