நாகர்கோவில், மே 15 –
நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மனைவி வசந்தா (70). இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வசந்தாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக வசந்தா வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவர் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மலை பறித்து சென்றனர்.
கத்தியால் கிழித்ததில் அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நகைகளை திருடி விட்டு கும்பல் பைக்கில் தப்பி உள்ளனர். வசந்தா வீடு தனியாக அமைந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தில் யாரும் இதை கவனிக்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் இந்த சம்பவம் தெரிய வந்தது. உடனடியாக வசந்தாவை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.
மூதாட்டியை கத்தியால் குத்தி நகையை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வசந்தா வீட்டில் தனியாய் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் வந்துள்ளது. உள்ளூரை சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


