மார்த்தாண்டம், ஜூன் 8 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார் தனக்கு வாக்களித்த சூழால் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரச்சார வாகனத்தில் பயணம் மேற்கொண்டு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கடந்த ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முழுமையாக சரியாக நடக்கிறதா? என்பது குறித்து 2 நாட்கள் கழித்து நேரடியாக ஆய்வு செய்து அந்த பணிகளை தீவிரப்படுத்த உள்ளோம். மேலும் இன்னும் என்னென்ன திட்டங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடைமுறைபடுத்தப்படும்.
சுற்றுலா மாவட்டங்கள் வரிசையில் இருக்கும் குமரி மாவட்டத்தை மேலும் மெருகேற்றி முதலாவது இடமாக மாற்றுவோம். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
சுற்றுலா தலங்களில் குப்பைகளை சரிவர அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்து இந்த துறையை ஒரு நல்ல துறையாக மாற்ற வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆகையால் தமிழகம் முழுவதும் இருக்கின்ற சுற்றுலா மையங்களை பார்வையிட்டு அங்கெல்லாம் என்னென்ன தேவை இருக்கிறது என்பதை கண்டறிந்து என்னென்ன புது திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதை அறிந்து வரும் நிதி அறிக்கையின் போது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல திட்டங்களை அறிவிப்போம்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஏற்கனவே தவெக தலைவர் முதல்வர் விஜய் நின்று வெற்றிபெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் அங்கு போட்டியிடாது. தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்தான் போட்டியிடுவார். இந்திய கூட்டணி குறித்த முடிவுகளை டெல்லி தலைவர்கள்தான் எடுப்பார்கள்.
திமுகவை குறித்து சொல்லவேண்டுமன்றால் அதிக நாள் ஆகும். அதிக நேரம் ஆகும். திமுகவினர் 1967 முன்னால் மற்றும் பின்னால் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கே சாத்தியமே இல்லை என்று சொன்னார்கள். இப்போது கூட்டணி ஆட்சி சாத்தியமாகியதா? அதனால் அவர்கள் பேச்சை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை என தெரிவித்தார்.



