நாகர்கோவில், ஜூன் 9 –
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கும் தவெக கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் த வெக வேட்பாளர் சபின் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையின் போது மாறி மாறி முன்னிலை வகித்தபடி இருந்தனர். இதனால் இருவரில் யார் வெற்றி பெறுவார்? என்று எதிர்பார்ப்பு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை காணப்பட்டது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 66,434 வாக்குகளும் தவெக வேட்பாளர் 65,123 வாக்குகளும் பெற்றனர். இதனால் 1,316 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு போதிய மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்து, மேலும் சில கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெக ஆட்சி அமைத்தது. இதில் கிள்ளியூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றிக்கு எதிராக தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட குமரி மேற்கு மாவட்ட த வெக செயலாளரான சபின் புகார் மனு அளித்துள்ளார். அவர் குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சென்று தனது புகார் மனுவை கொடுத்திருக்கிறார். மேலும் அவர் சட்டமன்றத் தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் அதிகாரி, சட்டமன்ற செயலர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கும் தனது புகார் மனுவை கடிதமாக அனுப்பி உள்ளார்.
அவர் தனது மனுவில்: ஏராளமான தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. ஒரு வாக்குச்சாவடியில் 6 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு வாக்கு சாவடியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. 5 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவித்தும், அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்காமல் தீர்வு காணாமல் இறுதி முடிவுகளை அறிவித்தனர்.. என்று பல்வேறு காரணங்களை தனது மனுவில் சபின் குறிப்பிட்டு உள்ளார்.
எனவே ராஜேஷ்குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க கோரி விரைவில் ஹைகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் எதிரெதிர் அணியாக இருந்த தவெக மற்றும் காங்கிரஸ், தேர்தலுக்குப் பிறகு ஒரே அணியாக மாறி தற்போது தொடர்ந்து செயல்படும் நிலையில் அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக நிர்வாகி புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



