ஆம்பூர், மே.21-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணா சிலையின் பின்புறம் உயர் மின் கோபுர விளக்கு கம்பம் ஒன்று உள்ளது. இந்த உயர் மின் கோபுர மின்விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதுகுறித்து ஆம்பூர் நகராட்சிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். உயர் மின் கோபுரத்துக்கு செல்லும் ஒயர்கள் அறுந்து கீழே விழுந்து கிடக்கிறது. இது மழைக்காலம் என்பதால் மின்சாரம் தாக்குமோ என மின் கம்பம் அருகில் வருவதற்கு பயணிகள் அச்சப்படுகின்றனர். அதேபோல் மின் விளக்கு எரியாததால், பேருந்து நிலையத்துக்கு உள்ளே வரும் பயணிகளும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்ல வருவோரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள இந்த மின் விளக்குகள் எரியாததால், அண்மை காலமாக சமூகவிரோதிகளின் நடமாட்டமும் , சிறு சிறு குற்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக மின்விளக்குகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



