நாகர்கோவில், பிப். 20 –
குமரி மாவட்டத்தில் 4 வழிப்பாதை மற்றும் ரயில்வே துறையின் 2 வழிப்பாதை பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளுக்காக ஏராளம் நீர்நிலைகளை அழிப்பதாக புகார் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே நீர் நிலைகளை பாதுகாக்க – மாநில அளவில் வேளாண்மைத்துறை & நீர்வளத்துறை சார்பில் ‘உயர்மட்ட குழு’ அமைக்க வேண்டும், கடலுக்குள் செல்லும் மீனவர்களை ஆபத்து காலத்திலும், நோய்களிலிருந்தும் பாதுகாக்க ‘கடல் ஆம்புலன்ஸ்’ அமைக்க வேண்டும்,
அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், நாற்கர சாலை திட்டத்தாலும் & இரட்டை ரயில்பாதை திட்டத்தாலும் பாதிக்கப்படும் நீர்நிலைகளை ஆய்வுசெய்து அறிக்கை வழங்குமாறு 6 மாதமாக தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்ட பிறகும் இதுவரை அறிக்கை வழங்காத நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் பற்றி ஆய்வறிக்கை வழங்காத வேளாண்மைத்துறை அதிகாரிகளை கண்டித்தும், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி
விவசாயிகள், மீனவர்கள், கூட்டுறவு சங்கத்தினர், சஹகர்பாரதி அமைப்பினர் இணைந்து வரும் 25-ம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. போராட்டத்துக்கு பாசனத்துறை சேர்மன் வின்ஸ்ஆன்றோ, சஹகர்பாரதி தலைவர் சகாயம் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழுவின் குமரி மாவட்ட நிர்வாகிகள் தாணுபிள்ளை, செண்பக சேகரபிள்ளை, அருள், முருகேசபிள்ளை, ஹென்றி, தேவதாஸ் உள்பட பாசனத்துறை நிர்வாகிகள், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், மீனவர்சங்க, கூட்டுறவுசங்க, சஹகர்பாரதி நிர்வாகிகளும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொள்கின்றனர்.



