சங்கரன்கோவில், ஜன. 22 –
சென்னையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தியை நேரில் சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சீருடை திட்டம் மற்றும் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட உற்பத்தி குறியீட்டில் கடந்த ஆண்டை விட குறைவான அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் குறியீட்டை முடித்து மேலும் தொழில் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேலும் உள்ள பெடல் தறி கேஸ்மெட் ரக உற்பத்திக்கான பாவு மற்றும் ஊடை நூலாக சீருடை துணிகளுக்கு குறியீட்டில் 50% அளவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான கைத்தறிகள் பாவு நூல் இல்லாமல் இயங்காமல் உள்ளது.
எனவே நெசவாளர்களின் நலன் கருதி சீருடை உற்பத்திக்கு ஏதுவாக தேவையான பாவுநூல் மற்றும் ஊடை நூல்கள் முழுமையாக திருநெல்வேலி சரகத்திற்கு வழங்க வேண்டும் எனவும், மேற்படி சீருடைகள் உற்பத்தி செய்வதற்கு தேவையான பாவு நூல் மற்றும் ஊடை நூல் ஆகியவைகளை பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு திட்டங்களின்கீழ் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நெசவாளர்களின் நலன் கருதி ஏற்கனவே வழங்கப்பட்ட பாவு மற்றும் ஊடை நூல் போக மிகுதியாக பாவு மற்றும் ஊடை நூல் விரைந்து வழங்கி தொடர் வேலை வாய்ப்பு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



