திருவண்ணாமலை, பிப். 18 –
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சியில் ஸ்ரீ சாய்பாபா மகளிர் குழுவினர் மகளிர் திட்டத்தின் மூலமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவி பெற்று பினாயில், பிளிசிங் பவுடர், ஆசிட், துணி சோப், துணி பவுடர், பாத்திரம் கிளினிக் சோப், பாத்திரம் கிளினிக் லிக்யூட் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது தயாரிப்பு பொதுமக்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இந்த மகளிர் குழுவினருக்கு மாதம் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சாய்பாபா மகளிர் குழு பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து விற்பனையை மேலும் பெருக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அப்போது மகளிர் திட்ட இயக்குனர் தனபதி, உதவி திட்ட அலுவலர் சந்திரகுமார், வட்டார இயக்க மேலாளர் சத்யராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.



