தருமபுரி, அக்டோபர் 01 –
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டிலே மிகப்பெரிய ஊராட்சியாகும். இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள 15-வது வார்டில் வெங்கடேச பெருமாள் கோயில் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் பிரச்சனை உள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்து செயல் அலுவலர், அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு மற்றும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய வந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து செயலாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கும்போது இலக்கியம்பட்டி, கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஜெகநாதன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கு போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் கழிவுநீர் கால்வாய் வேலை, முறையாக தூய்மை பணி செய்வதில்லை மேலும் தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்கள். மேலும்
இப்பகுதியில் குடிநீர் தேவைக்காக ஒரு மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், 2 மினி டேங்க்கும் உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காமல் இருந்துள்ளனர். அதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி பொது மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் நாங்கள் தருமபுரி – சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்ய முடிவு எடுத்தோம். அதிகாரிகள் இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி வழங்கி உள்ளனர். இன்று சரி செய்யப்படவில்லை என்றால் நாளை மீண்டும் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.



